திருவானைக்காவல் இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி தல மரம்: வெண் நாவல், வில்வம் ஆறு: காவிரி - கோயிலுக்குள் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. வழிபட்டோர்: அம்பிகை, நந்தி, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கோட்செங்கட் சோழ நாயனார், சேக்கிழார், தாயுமானவர், பிரம்மா, ஜம்பு முனிவர், சிலந்தி, யானை, இராமன், கௌதம முனிவர், பராசர முனிவர் முதலானோர். ஆதிசங்கரர், இங்குள்ள அம்பிகைக்கு இரண்டு ஸ்ரீ சக்கரங்களைச் செய்து அதைத் தோடாக அணிவித்தார். பஞ்சபூத தலங்களில் நீருக்கானது, நால்வராலும் பாடல்பெற்றத் தலம். உலகம் உய்யும் பொருட்டு சிவபெருமானே தனக்கு குருவாக வந்து ஞானோபதேசம் செய்யவேண்டும் என்று விரும்பினார் உமையவள். அதன்பொருட்டு சக்தி இந்த வெண்ணாவல் வனத்தில் காவிரியின் நீரையே சிவலிங்கமாகத் தன் கரங்களால் திரட்டி வழிபாடு செய்தார். அவர் தம் பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான், தாமே குருவாக வந்து இறைவிக்கு உபதேசித்து அருளினார். இதன் காரணமாக இத்தலம் ஞானபூமி என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் குரு சிஷ்ய பாவத்தில் இருப்பதால் இறைவன் இறைவிக்குத் திருக்கல்ய...